முதலில் சில Disclaimers!
இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டிருக்கும் உதாரணங்கள் மிகவும் குறைவானவை. முழுமையான பட்டியல் அன்று.
எனது தமிழ்ப் பிழைகளைப் பொறுத்தருள்க! அழகி software -transliteration இப்பொழுதுதான் பழகிக்கொண்டிருக்கிறேன்.
பிழைகளை பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டி உதவவும்.
திரைப்படம் - தமிழரின் ரசனை மலினப்படுத்தப்பட்ட விதம்
அனேகராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட, பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்ட, கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒரு கருத்தை எடுத்துக்கொள்வோம். திரைப்படங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் எண்ணிலடங்காதவை. அது குறித்த பல்வேறு விவாதங்கள், ஆராய்ச்சிகள் நடந்து முடிந்த,நடந்து கொண்டிருக்கும் நிலையில் அது பற்றி கூற புதிதாய் ஒன்றும் இல்லை. நான் இங்கே கூற முயல்வது எப்படி தமிழர்களின் ரசனை தமிழ்த் திரைத்துறையால் திட்டமிட்டுமழுங்கடிக்கப்பட்டிருக்கிறது, ஒரு சாதாரண ரசிகன் திரைத்துறையினரால் எவ்வாரெல்லாம் ஏமாற்றப்படுகிறான், தமிழ் திரைத்துறை ஒரு கலைத்துறை அல்ல ஒரு சர்வ சக்திவாய்ந்த கேளிக்கை கூட்டம் என்பதைப்பற்றியாகும்.
தமிழ்த்திறை ஒரு மாபெரும் அமீபா போன்று (Evolution படத்தின் இறுதிக்காட்சியில் வரும்) தனக்கென எந்த உருவமும் இல்லாத எல்லாவற்றையும் விழுங்கி, செறித்து, ஒற்றைத்தன்மையாக்கி விடுகிற ஒரு அமைப்பாக வளர்ந்து விட்டிருக்கிறது. தமிழகத்தின் எந்த ஒரு அமைப்புக்கும், அரசியல் கட்சிக்கும் இல்லாத செல்வாக்கு திரைத்துறைக்கு உண்டு.தமிழகத்தில் நீங்கள் கண்டுகொள்ளப்பட வேண்டுமென்றால், பிரபலமாகவேண்டுமென்றால் உங்களுக்கு திரைத்துறையுடன் ஏதாவது ஒரு தொடர்பு கண்டிப்பாக தேவை. அப்படி இருந்தால் அணுஆயுத பரவலில் இருந்து ஆப்பக்கடை திறப்புவிழா வரை உங்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும். அவை தமிழ் ஊடகங்களால் பரபரப்பாக விவாதிக்கவும்படும். இதையும் மீறி நீங்கள் சற்று பிரபலமாகிவிட்டால் திரைத்துரை ஒன்றும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. அது நீங்கள் நினைப்பது போன்று அவ்வளவு மந்த புத்தியுடையதல்ல. உடனே அவர்களையும் தனக்குள் இழுத்து செறித்துக்கொள்ளும். உங்களுக்கு உதாரணம் தேவை எனில் சாலமன் பாப்பைய்யா, எஸ்ரா, சாரு, அப்துல் கலாம், சடகோபன் ரமேஷ், தொல். திருமா, திருநாவுக்கரசர் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஒன்று நீங்கள் திரைத்துறையில் இருந்தால் பிரபலமாவீர்கள் மீறி திரைத்துறையில் இல்லாமல் பிரபலமானால் திரைத்துறையால் இழுதுக்கொள்ளப்படுவீர்கள். திரைத்துறை இன்றி தமிழ்ப் பிரபலத்திற்கு மோட்சம் இல்லை.
இதில் என்ன தவறு. இதனால் சமூகதிற்கு என்ன கெடுதல்? உனக்கேன் இந்த வயத்தெரிச்சல்? Why this koalaveri? என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. இங்கே தான் பிரச்சனை துவங்குகிறது. இப்படி அறிவுஜீவிகளையும், முக்கிய ஆளுமைகளையும் தனக்குள் சுவீகரித்துக்கொண்ட திரையுலகம் அவர்களை எவ்வாறு பயன்பட்டுத்திக்கொண்டது என்பதே இங்கு நாம் கருத்தில்கொள்ள வேண்டியதாகும். தத்தமது துறைகளில் சிறப்பாக செயல்படும் ஆளுமைகளை உலகத்திரை பயன்படுத்திக்கொண்ட விதத்தையும் தமிழ்த்திரை பயன்படுத்திகொண்ட விதத்தையும் நாம் ஒப்பிடுதல் நலம். உலகின் சிறந்த திரைப்படங்கள் 90% ஏதாவது ஒரு புத்தகத்தை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளன.(தலைசிறந்த 100 புத்தகங்களைத் தழுவிய திரைப்படங்களின் பட்டியலைக் காண இந்த இணைப்புக்கு செல்லவும்.(
http://themovieblog.com/2008/11/the-movie-blogs-top-100-movies-based-on-books). உலக மொழிகள் அனைத்திலும் அவற்றில் உள்ள தலை சிறந்த இலக்கியங்கள் அந்தந்த மொழிகலில் சிறந்த திரைப்படங்களாக உருவாக்கப்படுள்ளன. அண்டை மாநிலமான கேரளா இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தமிழ்த்திரையின் தாக்கத்தால் கேரள திரைப்படங்களும் உருப்படாமல் போய்க்கொண்டிருப்பது பற்றி பின்பு விவாதிக்கப்படும். அது போல உலகின் புதிய தத்துவங்கள், சிந்தனைக் கோட்பாடுகள், அறிவியல் கோட்பாடுகள், மாற்று சிந்தனைகள், மனோதத்துவ ஆரய்ச்சிகள், சிறப்பான ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு இவை அனைத்தும் திரைப்படங்களாக, திரைப்படங்களில் நேரிடையகவோ அல்லது மறைமுகமாகவோ எடுத்தாளப்பட்டிருகின்றன. இதில் நாம் முக்கிமாக கவனிக்கவேண்டியது என்னவெனில் அப்படி அவை திரைப்படமாக உருவாகும் பொழுது அந்த கோட்பாடுகளிலோ, சாராம்சங்களிலோ எந்தவிதமான சமரசங்களும் செய்யப்படுவதில்லை. எடுத்துக்கொள்ளும் கருத்தை எந்த அளவுக்கு திரையில் ஒரு இயக்குனரால் பிரதிபலிக்க முடிந்தது என்பதே அவரின் வெற்றிக்கான அளவுகோலாக உள்ளது.
தமிழ் இலக்கியங்களை திரைப்படமாக எடுக்க முயன்ற உண்மையான ஒரு சில முயற்சிகள் சில உள்ளன. அவற்றில் ஜெயகந்தனின் உன்னைப்போல் ஒருவன், தங்கர் பச்சானின் அழகி, புதுமைப்பித்தனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட உதிரிப்பூக்கள், நாமக்கல் கவிஞரின் மலைக்கள்ளன் என ஒரு சிலவற்றை தவிர மற்றவை திரைப்படமாக்கப்பட்ட விதம் மிகவும் மோசமாகவே உள்ளது. கல்கியின் நாவல்கள் திரைப்படமாக உருவாகக்கூடிய அனைத்து தகுதிகளைக்கொண்டிருந்தும் ஏன் அவ்வாறு நடைபெறவில்லை?
இதுவரை தமிழில் வந்துள்ள படங்களில் இயக்குனரே கதாசிரியராக இல்லாத படங்களின் எண்ணிக்கை எத்தனை? மிக குறைவானதாகவே இருக்கும். இவற்றில் இயக்குனர் திரைக்கதை ஆசிரியராக இல்லாத படங்களின் எண்ணிக்கை சொற்பமானது. தமிழ்த்திரையுலகில் ஒரு உதவி இயக்குனர் இயக்குனராக மாறவேண்டுமெனில் முதலில் அவரிடம் ஒரு கதையும், திரைக்கதையும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் அதற்கான முயற்சியையே துவங்கமுடியும். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் திரைப்படங்களுக்கு கதையையும், திரைக்கதையையும் தவிர மற்ற தொழில்நுட்பக்கூறுகளும் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளாமலேயே இயக்குனர்களாகிவிடுவதுதான். ஒரு மாறுபட்ட கதை(சிறிது மாறியிருந்தாலே போதுமானது) கண்டறிந்த உதவி இயக்குனர் அதற்கான திரைக்கதையை எழுதிவிட்டாலேயே அவரால் இயக்குனராகிவிட முடியும். ஒரு திரைப்படத்தில் இவ்விரண்டு கூறுகளைத் தவிர இசை, ஒளி, ஒலி, எடிட்டிங் என எண்ணிலடங்காத தொழில்நுட்பக்கூறுகள் தேவை.இவை அனைத்தும் சேர்ந்து உருவாவதே திரைமொழி. இது குறித்த மிக சுமாரான புரிதல் உள்ள ஒருவரால் இங்கே இயக்குனராகி ஒரு படத்தை எடுத்துவிட முடிகிறது.(சமீபத்தில் ஒரு புதுமுக இயக்குனரின் கூற்றை இங்கே நினைவு கூற விழைகிறேன். தனது படத்தின் ஒளிப்பதிவாளர் பற்றி அவர் இவ்வாறு கூறினார். "அவரு என்னெனமோ சொல்வாருங்க! நெரைய நமக்கு தெரியாத புது புது விஷயங்கள படிச்சிருக்காரு. சினிமாவில் ஒவ்வொரு கலருக்கும் ஒரு மூட் வருமாம். நான் அதுல சிலவற்றை ட்ரை பண்ணி பாக்குரேன்னார். நான் சரின்னு விட்டுட்டேன். அது படத்துல நல்லா வந்துருக்கு"). ஒரு திரைபடத்தில் வண்ணங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய புரிதல் இல்லாமலேயே ஒருவரால் இயக்குனராகி திரைப்படம் எடுக்க முடிந்திருக்கிறது. அதைவிட முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது அவர் இது போன்ற விஷயங்கள் அறிந்திருப்பது இயக்குனரின் அடிப்படை தேவை என்பதயே உணரவில்லை என்பதுதான். தன்னுடைய சொந்த கதையையே நல்ல திரைமொழியாக்க முடியாமல் திரைக்கதையை தவிற மற்ற அனைத்துக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியையே நம்பி இருக்கும் இயக்குனர்களால் நிரம்பியதே தமிழ்த்திரையுலகம். நான் இயக்குனர்கள் அஷ்டாவதானிகளாக இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அது இயலாத காரியமும் ஆகும் (நீங்கள் விஜய TR ஆக இருந்தால் தவிர). ஆனால் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு திரைப்படம் குறித்த எல்லா கூறுகளைப்பற்றிய அடிப்படை அவசியம் தேவையானதாகும்.
தொடரும்...